சொல்லடா! – சுரதா




சொல்லடா! சுரதா

கோங்கம் மலர் பூத்த-பசுங்
குன்றம் முழுநிலவை
வாங்கிப் புசிக்குதுபார்-குளிர்
வண்ணப் பனிச்சிரிப்பே !
தீங்கனிச் செந்தமிழ்தான்-எங்கள்
சிறப்பு விளக்கமென்றே
மாங்கனி வாய் திறந்து- நான்
மகிழ்ந்திடச் சொல்லாயோ!

“இச்சகத் தார்க்குநாங்கள்-எதிலும்
இளைத்தவ ரல்லகாண்!
அச்சம் இடித்துவிட்டோம்- நாங்கள்
ஆண்மை வரிப்புலிகள்:
உச்சி இமயத்திலே-புகழ்
ஒங்கும் மறக் குலத்தின்
மச்சக் கொடிபறக்கும்’-என்று
மாமல்லா நீ சொல்லடா!

‘வானை அளந்திடுவோம்-புது
வையம்  நிறுத்திடுவோம்!
தேனைநிகர் தமிழ்க்குத்-துளி
தீங்கு விளைப்போர் பெரும்
ஆனைகள் போல்வரினும்- நாங்கள்
ஆயிரம் சிங்கங்கள்தாம்”‘- எனச்
சேனை முரசொலித்து-இதைச்
செப்படா தோள் உயர்த்தி!

– உவமைக்கவிஞர் சுரதா
இதழ் பொன்னி, 1947 ஏப்பிரல்
தரவு :பாரதிதாசன் பரம்பரை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue