Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை : 124. உறுப்பு நலன் அழிதல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 123. பொழுது கண்டு இரங்கல் தொடர்ச்சி)
 


திருக்குறள் அறுசொல் உரை
  1. காமத்துப் பால்
 15.கற்பு இயல்

124.உறுப்பு நலன் அழிதல்

பிரிவைப் பொறாத தலைவியது
கண்,தோள் நெற்றிஅழகு கெடுதல்.

(01-07 தலைவி சொல்லியவை)         .     
  1. சிறுமை நமக்(கு)ஒழியச், சேண்சென்றார் உள்ளி,
      நறுமலர் நாணின கண்.
பிரிவால் அழகுஇழந்த கண்கள்,
அழகுக்குவளை கண்டு வெட்கும்.

  1. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்,
      பசந்து பனிவாரும் கண்.
நிறம்மாறி நீர்சிந்தும் கண்கள்,
பிரிவுத்துயரைச் சொல்லுவ போலும்.

  1. தணந்தமை சால அறிவிப்ப போலும்,
      மணந்தநாள் வீங்கிய தோள்.
கூடலில் பருத்த தோள்கள்
மெலிவது, பிரிவை அறிவிக்கவோ?

  1. பணைநீங்கிப், பைந்தொடி சோரும், துணைநீங்கித்,
      தொல்கவின் வாடிய தோள்.
பிரிவால், தோள்களும் அழகினை
இழக்கும்; வலையல்களும், கழலும்.

  1. கொடியார் கொடுமை உரைக்கும், தொடியொடு
      தொல்கவின் வாடிய தோள்.
வளையல்களும், வாடும் தோள்களும்,
காதலரின் கொடுமையைக் கூறும்.

  1. தொடியொடு தோள்நெகிழ நோவல், அவரைக்
      கொடியர் எனக்கூறல் நொந்து.
வளையல்,தோள் நெகிழக் கண்டோர்,
அவரைப் பழிப்பதால் வருந்துவேன்.

  1. பாடு பெறுதியோ? நெஞ்சே! கொடியார்க்(கு)என்
      வாடுதோள் பூசல் உரைத்து.
தோள்மெலிவுத் துயரை, அவர்க்குக்
கூறி, நெஞ்சே! பெருமைப்படுதியோ?

(08-10 தலைவன் சொல்லியவை)
  1. முயங்கிய கைகளை ஊக்கப், பசந்தது
      பைந்தொடிப் பேதை நுதல்.
தழுவும் கைகளைத் தளர்த்தியதும்,
தலைவி நெற்றியில் பசலை.

  1. முயக்(கு)இடைத் தண்வளி போழப், பசப்(பு)உற்ற,
      பேதை பெருமழைக் கண்.
அணைப்பிடைக் குளிர்ந்த காற்று
புகுந்ததும், கண்களில் நிறமாற்றம்.

  1. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே,
      ஒள்நுதல் செய்தது கண்டு.      
நெற்றியின் பசலையைக் கண்டு,
கண்களின் பசலை துன்புற்றது.
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue