Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்





attai_kuralarusolurai
திருக்குறள் அறுசொல் உரை
02. பொருள் பால்
13. குடி இயல்
அதிகாரம் 105. நல்குரவு
உணவு,உடை, உறைவிடம் போன்றவை
எதுவும் இல்லாத ஏழ்மைநிலை.
  1. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின்
      இன்மையே, இன்னா தது.
ஏழ்மையைவிடக், கொடிது யாது….?
ஏழ்மையே எழ்மையினும் கொடிது.

  1. இன்மை எனஒரு பாவி, மறுமையும்,
      இன்மையும் இன்றி வரும்.
     வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும்
தொடரும்; தொடர்ந்து வருத்தும்.

  1. தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக,
      நல்குரவு என்னும் நசை.
குடிப்புகழை, வடிவ அழகை,
வறுமை மொத்தமாய்க் கெடுக்கும்.

  1. இல்பிறந்தார் கண்ணேயும், இன்மை, இளிவந்த
      சொல்பிறக்கும், சோர்வு தரும்.
நல்ல குடியாரிடமும் ஏழ்மையால்,
இழிசொல், தளர்ச்சி பிறக்கும்.

  1. நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்
      துன்பங்கள் சென்று படும்.
வறுமைத் துன்பத்தொடு, பலவகைத்
துன்பங்களும் வந்து தோன்றும்.

  1. நல்பொருள் நன்(கு)உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார்
      சொல்பொருள், சோர்வு படும்.
நல்கருத்தை நன்குஉணர்ந்து சொல்லினும்,
ஏழையின் சொற்கள் எடுபடா.

  1. அறம்சாரா நல்குரவு, ஈன்றதாய் ஆயினும்,
      பிறன்போல் நோக்கப் படும்.

நேர்மையொடு வாழாத ஏழையான்,
ஈன்ற தாய்க்கும் அயலான்.

  1. இன்றும் வருவது கொல்லோ….? நெருநலும்,
      கொன்றது போலும் நிரப்பு.
நேற்றும் கொல்வதுபோல் வந்தது;
இன்றும் அவ்வறுமை வந்துவிடுமோ…..?

  1. நெருப்பின்உள் துஞ்சலும் ஆகும்; நிரப்பின்உள்,
      யா(து)ஒன்றும் கண்பா(டு) அரிது.
நெருப்புக்குள் தூங்கலாம்; வறுமைக்குள்
எவர்க்கும் கண்மூடல் கடினம்.

  1. துப்பர(வு) இல்லார், துவரத் துறவாமை,
      உப்புக்கும், காடிக்கும் கூற்று.
முற்றும் துறவாத வறியவரால்,
உப்புக்கும், கூழுக்கும் கேடுதான்.
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue