Skip to main content

நெடுந்துயர் அகன்றேயோடும் ! – எம்.செயராமன்

நெடுந்துயர் அகன்றேயோடும்! – எம்.செயராமன்

rain-and-storm
வான்முகில் வளாது பெய்கவென
வாயார வாழ்த்துப் பாடி
வையத்தில் விழாக்கள் தோறும்
மனமாரப் பாடி நிற்போம்
வாழ்த்தினைக் கேட்டு விட்டு
வானுறை தேவர் எல்லாம்
வையகம் வாழ்க எண்ணி
மாமழை பொழியச் செய்வர்
வறண்டு நிற்கும் பூமியெல்லாம்
வான் மழையைக் கண்டுவிட்டால்
மகிழ்வு கொண்டு வானோக்கி
மனதார நன்றி சொல்லும்
வயல்நிறையும் குளம் நிறையும்
வயலுழுவார் மனம் மகிழும்
தினமும் மழை பெய்கவென
தீர்மானம் எடுத்தும் நிற்பார்
அகமகிழ வைக்கும் மழை
ஆபத்தைத் தந்த திப்போ
அனைவருமே மழை பார்த்து
அலமந்தே நின்று விட்டார்
பார்க்கு இடம் எல்லாம்
பாய்ந்தோடும் வெள்ள மதால்
பரி தவித்து நிற்கின்றார்
பல இடத்தில் மக்களெலாம்
நீர் பெருகி நிற்பதனால்
நிவாரணப் பணிகள் எல்லாம்
யார் செய்வார் எனவேங்கி
நாளும் அவர் அழுகின்றார்
மேடைகளில் ஏறி நின்று
வாய் கிழியப் பேசியவர்கள்
அறிக்கைகளை விட்டு விட்டு
அவர்பாட்டில் இருக்கின்றார்
ஆளுகின்ற கட்சி தனை
அன்றாடம் திட்டி நிற்கும்
எதிர்க் கட்சிக் காரரெலாம்
இதை வைத்தே திட்டுகின்றார்
எதிர்க் கட்சித் திட்டினுக்கு
ஏற்ற பதில் சொல்லவதிலே
இதைச் சாட்டாய் கொண்டுள்ளார்
ஏறி நிற்கும் அரியணையார்
வாதங்கள் புரிவதிலும் வழக்குகள் இடுவதிலும்
பேதங்கள் யாதுமின்றி பேயாட்டும் போடுகின்ற
சாதனைச் செம்மல்கள் சராசரி மக்களது
வேதனைகள் புரியாது விடுகின்றார் அறிக்கைமழை !
வடிகால்கள் அமைக்கவென வந்திருக்கும் பணமெல்லாம்
வட்டாட்சி மாவட்டம் மந்திரிகள் வசமாகும்
மழைவந்த பின்னாலே மழைவெள்ளம் தனைப்பார்த்து
மந்திரிகள் மற்றவர்கள் மாடிநின்று படமெடுப்பார் !
அவர்களது தொலைக்காட்சி அதைக்காட்டிப் பணமாக்கும்
அவதிப்படும் மக்கள்தமை ஆருமே பார்க்கார்கள்
அவர்நிலையை பெரிதாக்கி அனுதாபம் தேடியவர்
அவர்பொருட்டு வரும்நிதியை அமைதியாய் சுருட்டிநிற்பார் !
வெள்ளப் பெருக்குக்குக்காய் வேதனையாய் இருப்பதுபோல்
வெள்ளை வேட்டிசட்டையுடன் விதம்விதமாய் கதைவிடுவார்
உள்ளமெலாம் அழுதபடி ஓர்வழியும் புரியாமல்
வெள்ளத்தில் அகப்பட்டார் விழிபிதுங்கி நிற்பார்கள் !
மாடிவீட்டில் வசதியுடன் மனைவி மக்களோ டிருப்பார்
மாவெள்ளப் பாதிப்பால் மகிழ்வையெல்லாம் இழந்துநிற்கும்
மக்கள்தமை மனங்கொள்ளா மாமனிதராய் இருப்பர்
மக்களெலாம் வெள்ளத்தில் மரணத்தை அணைத்துநிற்பார் !
பொறியியல் படித்தவர்கள் பொறுப்புதனை அறிந்தவர்கள்
நெறிமுறையில் செயல்பட்டால் நீரழிவு  வந்திடுமா
அறநெறியைக் கடைப்பிடித்து ஆட்சிதனை ஆற்றிவிடின்
அநியாய வெள்ளமது அனைவரையும் அழிக்காதே !
குடிகளைக் காக்கவேண்டும் குறையெலாம் போக்கவேண்டும்
நடித்திடும் செய்கைதன்னை நாட்டிலே அகற்றவேண்டும்
அரசியல் செய்கின்றாரும் அதிகாரம் செய்கின்றாரும்
நினைவெலாம் தூய்மைபெற்றால் நெடுந்துயர் அகன்றேயோடும் !
  • எம்.செயராமன்
  • மெல்பேண் .. அவுத்திரேலியா


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue