மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 – இலக்குவனார் திருவள்ளுவன்

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 7 

– இலக்குவனார் திருவள்ளுவன்

 mangani62
அருகிய அயற்சொற்கள்
அயல்மொழிச் சொற்களை மிகக் குறைவாகவே கையாண்டுள்ளார். அவ்வாறு அவை இடம் பெற்ற இடங்களிலும் நான்கு இடங்கள் தவிர, அனைத்து இடங்களிலும் கிரந்த எழுத்துகளை நீக்கித் தமிழ்வரிவடிவிலேயே குறிப்பிடுகிறார்.

செகத்தில் (மாங்கனி : 2. சேரன் அவையில் ..7:7)
கோசமிட்டு (மாங்கனி :18. வென்றிகொள் சேரர்தான :1:4)
சீவன் (மாங்கனி :38 சாகாத சித்திரங்கள் 9-1)
.துட்டனும் (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.8)
என்பன போன்று அயலெழுத்து நீக்கித் தமிழெழுத்து கொண்டு குறிக்கின்றார்.
அதிர்சுட்டக்காரி (மாங்கனி :15 ஏடீ தலைவி:3.4)
பட்டாபிசேகம் (மாங்கனி :35. வஞ்சியிற் கொடியும் வஞ்சிக்கொடியும் 3:8)
நாதசுவரத்துக்காரர் (மாங்கனி :35 வஞ்சியிற் கொடியும் வஞ்சிக்கொடியும் 5:9)
சந்தோச (மாங்கனி :35 வஞ்சியிற் கொடியும் வஞ்சிக்கொடியும் 6:8)
என வரும் அந்த இடங்கள்கூட அச்சுப்பிழையாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது. (இங்கு அயலெழுத்து நீக்கித் தரப்பட்டுள்ளன.) அடுத்த பதிப்பில் இந்த இடங்களிலும் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து பதிப்பகத்தார் வெளியிட வேண்டும்.
உவமை முத்துகளும் உருவகப் பவளங்களும்
வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத் தோற்றம்
(தொல்காப்பியம், பொருளியல், நூற்பா 272)என உவமைக்குத் தனி இயல் தந்த தொல்காப்பியர் விளக்குகிறார்.
உருவகங்களையும் காவியத்தில் அள்ளித் தெளித்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். உவமை உருபு மறைந்து உவமையானது பொருளாக மாறும் நிலை உருவகமாகிறது.
உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்
என்கிறார் தண்டியாசிரியர் (தண்டியலங்காரம், நூற்பா 35)
உவமையின் செறிவான வடிவமே உருவகம் என்றும் சொல்லாம். கண்ணதாசனின் கவிதைகளில் உருவக நடை ஊடுருவிக் கிடக்கிறது. சான்றுக்கு மாங்கனியை உருவகங்களால் விளக்கும் பின் வரும் அடிகளைக் கூறலாம்.
விரிக்காத தோகைமயில் ! வண்டு வந்து
மடக்காத வெள்ளைமலர் ! நிலவு கண்டு
சிரிக்காத அல்லிமுகம் ! செகத்தில் யாரும்
தீண்டாத இளமை நலம் பருவ ஞானம்!
(மாங்கனி : 2. சேரன்அவையில்…7: 5-8)
இல்லாத ஒன்றை எதனுடன் உவமையாகக் கூறமுடியும்? ஆனால், கவிஞர் கண்ணதாசன், யாருமில்லாத கூடத்தை உவமிக்க முடியாதபடி உள்ளது என உவமைபோல் கூறுகிறார்.
ஒருவரும் இல்லாக் கூடம்
உவமைக்கு நில்லா தாகி

(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு:9:1-2)
மாங்கனியின் உயிர் மாங்கனியிடம் இல்லை; அவள் காதலன் அடலேறுவிடம் தான் உள்ளது. எனவே, அவனைத்தேடிவந்து காணாத பொழுது, ‘அவன் இல்லை’ என்று சொல்லாமல் உயிரில்லை என்கிறாள்.
உமதுருத் தேடி வந்தேன்
உயிரில்லை! காணேன் உம்மை!
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு:10:7-8)

கார்முகில்தான் மழை பொழியும் என்னும் எளிய அறிவியல் உண்மையை வெண்விசும்பிலும் நீர்உண்டெனும் விந்தையை உணர்த்துவதுபோல் வெள்ளை விழி நீரை உகுத்தது என்கிறார்.
விசும்புநீர் பொழிந்தாள் வெள்ளை
விசும்பிலும் நீர்உண் டென்ன
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு:11:7-8)
உள்ளங்கையில் உள்ள பொருள் உருண்டு விழுவதையும் உவமையாக்கி,
உள்ளங்கை இருந்தபொருள்
உருண்டுவந்து விழுந்ததுபோல்
விள்ளரிய மார்பகத்தில்
விழுந்தாள்
என மார்பில் வீழ்ந்ததைக் கூறுகிறார்.
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு :16:7-8)
சாலைகள் அகன்று பரந்து இருப்பதைக் குறிப்பதற்குக் கடலுடன் ஒப்பிடுகிறார் கவிஞர்.
கத்து கடல்போல் வீதி
(மாங்கனி : 1.வஞ்சியில் விழா 13:4)
என்பதன் மூலம் வஞ்சிமாநகரம் அகலமான வீதிகளையுடைய சிறந்த நகரம் என்கிறார்.
தீயப் பழக்க வழக்கங்களுக்குக்கூட முடி விருக்கும். ஆனால், புகழ் தலைக்கேறிவிட்டால் ஏது முடிவு? இதனை,

முடிவேது புகழ்ப்போதை மீறி விட்டால்!
(மாங்கனி : 2. சேரன் அவையில் .. 2: 4)
எனத் தெரிவிக்கிறார்.
அரசு நிலையாமையை,
விந்தையிலை ஆள்பவரைச் சிறையில் தள்ள
வெகுநாட்க ளாகாது வீர ருக்கு
(மாங்கனி : 18. வென்றிகொள் சேரர்தானை 2. 15-16)
என விளக்குகிறார்.
பள்ளியறைக்கு விளக்கமாக எளிமையாக,
பயிலாத வித்தைக்குப் பள்ளி என்றே
படுக்கையினைப் பள்ளிஎனச் சொன்னார் போலும்
(மாங்கனி : 36. கன்னிக்கு முதல் இரவு 5 1-2)
என்கிறார்.
பள்ளியறைக்காட்சியையும் நயத்தக்க முறையில் காட்சிப்படுத்துகிறார். இதோ அவ்வரிகள்:-
சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
சிலை தன்னை முகில்கொண்டு மறைத்தல் போலும்
இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
இடைசெல்ல முயல்கின்ற காட்சி போலும்
மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
வைரத்துட் புதைந்துள்ள தன்மைபோலும்
ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
ஒருவர்க்கும் தெரியாமல் மறைத்தல் போலும்
. . . .                       …           …
இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே
(மாங்கனி : 36. கன்னிக்கு முதல் இரவு – கடைசிப் பாவரிகள்)

உவமைச்சிறப்பு, உருவக அழகு, முரண்சுவை, தமிழுணர்வு வெளிப்பாடு, கவி நயம், புத்துவமை முதலான கவிஞர் கண்ணதாசனின் பாடல்வரிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பின்வருவனவற்றையும் கூறலாம்:
திறந்திருந்த வீட்டிற்குள் ஓசையின்றித்
திருடனைப் போல் நுழைந்தீரே
(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 17:1-2)
வெள்ளிக்கா சொருபிடியைக் கீழே கொட்டி
விட்டதுபோல் அலட்சியமாய்ச் சிரித்து
(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 22:1-2)
செங்கனிவாய்க் கோலமயில் வந்தாள் மெல்ல!
(மாங்கனி : 2. சேரன் அவையில் .3: 4)
எழுதாத ஓவியத்தை அருக ழைத்தே
எழிற்செல்வி வேண்மாள்நற் பரிசு ஈந்தாள்!
(மாங்கனி : 2. சேரன் அவையில் .12: 3-4)
தளிர்க்கொடி வேண்மா ளோடும்
காந்தமாய் நின்றான் சேரன்
(மாங்கனி : 3. வெள்ளிமாடத்தில் 1:4-5)
பூக்காட்டின் வாய்ப்பூட்டைத் தேன்தி றக்கும்
(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 9:2)
பொற்கிளியை வானரத்தின் மடியிற் போடப்
பொருந்தியதோ உன்னுள்ளம் போதும் போதும்
(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 9:5-6)
வான்திறந்து வந்தன்ன வலக்கை ஒன்று
மங்கைமுகக் கண்ணாடி தேக்கும் முத்தைத்
தேனெடுக்கும் கரும்பினைப் போல் எடுக்கும்
(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 14:1-3)
இட்ட கண்ணைக்
கழற்றாமல் குருடாகி நடைபி றழ்ந்து
(மாங்கனி : 5. நள்ளிரவு நாடகம் 23:3-4)
வேளைக்கு வேளைஇரா நடத்தல் கண்டு
(மாங்கனி : 6. பிஞ்சுமனம் 2: 7)
பொழுது பிறந்தது பூவை தன் இமைக்
கதவு திறந்து
(மாங்கனி : 7. உளங்கவர் கள்வன் 1:1)
வெண்மேகம் பள்ளத்தில் வருமா மீண்டும்
(மாங்கனி : 7. உளங்கவர் கள்வன் 3:2)
வடகோ டன்னத் திரண்டிருக்கும் உயர்தோளன்
(மாங்கனி : 11. சிறகடித்த காதல் 2 : 3-4)
தாழ மணத் தளிர்மேனித் தையல்
(மாங்கனி : 11. சிறகடித்த காதல் 6 : 7)
சிரிப்பெனும் படையின் செல்வி
(மாங்கனி : 13. தானையுந் தளிரும் 1:7)
மலையினிலோர் மகிழம்பூ உதிர்ந்து, சூறை
மல்லாக்கத் தூக்கிவந்து போட்டதைப் போல்
கலைநெகிழப் பலபேரும் ஆடினார்கள்
(மாங்கனி : 13. தானையுந் தளிரும் 5 : 1-3)

தனிமொட்டுக் கொடிஉச்சி தன்னில் ஆட
தன்மையினில் ஓர்எண்ணம் நெஞ்சில் ஆட
இனிப் போவோம் படைஉறங்கும் எனநி னைத்து
இராநடுவில் புலிவீரன் பூனையா னான்!
(மாங்கனி : 14. முற்றாத முதலிரவு 2: 5-8)

காதல், துடிப்பினால் சிவப்பைத் தின்ற
துட்டனும் யாரோ
(மாங்கனி :அதிர்சுட்டக்காரி 15 ஏடீ தலைவி:3.8)
இன்னமுதெப் பாத்திரத்தி   லிருந்தா லென்ன
எள்ளளவும் சுவைகுறையப் போவ தில்லை
(மாங்கனி :  18. வென்றிகொள் சேரர்தானை 2.7-8)
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். உவமையும் இனிமையும் அழகும் கலந்தே எளிமையாகச் சிந்திப்பதால் சொற்கள் யாவும் அவ்வாறே வெளிவருகின்றன.
 (சுவைக்கும்)
kannadasan


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue