Skip to main content

இவனா தமிழன் ? இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

இவனா தமிழன் ? இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

thamizhan01
இவனா தமிழன் ? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!
தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத்
தடுத்தால் உடனே சீறுகிறான்!
வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்!
வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!
தானும் முறையாய்ப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன் கடன் பேணி நடப்பதில்லை- நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!
இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்குப் பின்னும் வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் – இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!
தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழிப்பவனே –தான்
அடைந்ததை எல்லாம் இழப்பவனே!
seeninainaa-mohammed04


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue