தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்










பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.
பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.
படிப்பு: தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார்.
இயக்கம்: கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு. அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.
குடும்பம்: 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞரின் வாழ்வு முடிவடைந்தது.
கற்றல்:
கவிஞர் 1952 இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் நினைவாக கவிஞர் மனைவிக்குக் கடிதம் எழுதும்போது தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.
பட்டுக்கோட்டையின் பன்முக பரிமாணங்கள்
தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் என பன்முக பரிமாணங்கங்களைக் கொண்டவர் நாடக நடிகராக மாறி இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.
பட்டுக்கோட்டையாரின் வினா:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க? என்று சமுதாயத்தை நோக்கி பட்டுக்கோட்டையார் எழுப்பிய கேள்வி.
- 189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்.
- 1955 ஆம் ஆண்டு நல்லதச் சொன்னா நாத்திகனா என்பது அவர் முதல் பாடலாகும். பாரதிதாசனை தன் மானசீக குருவாக ஏற்றுக்க கொண்டார்.
பொதுவுடைமைச் சித்தாந்த பாடல்வரிகள்:
01. "தூங்காதே தம்பி தூங்காதே
சேம்பேறி என்ற சொல் வாங்கதே"
02. "சின்னப்பயலே சின்னப் பயலே
சேதிகேளடா ---------------
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி"
03. "வசதி படைச்சவன் தரமாட்டான்
வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"
"வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுரேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்"
04. "குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா"
05. "திருடாதே பாப்பா திருடாதே
-----------
கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்
போனால் பதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கொடுக்கிற நோக்கம் வளராது" என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை எளிமையாகப் பாடியவர்.
மகத்துவம்
தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.
1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக‌ இவரைக் கண்டனர்.
பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.
இறுதிக்காலம்:
08.10.1959 ஆம் ஆண்டு தனது 29-ம் வயதில் மரமடைந்தார். திமுகவின் மேடைப் பாடகர். அவர் நடித்த நாடகம் "என் தங்கை, கவியின் கனவு".
பட்டம்: கோயமுத்தூர் தொழிலாளர் சங்கம், மக்கள் கவிஞர் என்ற பட்டத்தையும், பாவேந்தர் விருதினை தமிழக அரசும் வழங்கிக் சிறப்பித்துள்ளது. இவரது பாடல்கள் தமிழகத அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
திரைப்பட உலகில் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்த கவிஞர்.
1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு மக்கள் கவிஞர் என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது.
1981ஆம் ஆண்டு தமிழக அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதல்வரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி கௌரவம்மாள் பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
1993ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மணி மண்டபம்:
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்(6)

பட்டுக்கோட்டையாரின் கருத்துக்கள் தற்போது மட்டுமல்ல எப்போதும் தேவைப்படும் என்பதனை அனைவரும் அறிய வேண்டும், இவரது எளிய கருத்துக்கள் அனைவரும் படித்து வாழ பழகினால் நாட்டிற்கும் ஏன் உலகிற்கே அமைதி தரும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
பட்டுக்கோட்டையார் என்றாலே அமரர் . திரு. கலியாணசுந்தரம் அவர்களைத்தான் யாருக்கும் நினைவில் வரும் , அவரது இளமை காலத்தில் மதுக்கூரில் சக்கினியர் ஹோட்டலில் இட்லிக்கு மாவு அரைக்கும்போது எதிரில் உள்ள சுவரில் அடுப்பு கரியால் கவிதை எழுதுவாராம் , அதனை பலரும் படித்துவிட்டு அந்த மக்கள் கவிஞரை மனதார பாராட்டுவார்களாம் , இன்றும் அவரது நினைவில் உள்ளவர்கள் மனதார, குறுகிய காலமே வாழ்ந்த ஒப்பற்ற கவிஞரை பெருமையுடன் மற்றவர்களிடம் பேசுவதை நான் பலதடவைகள் செவியுற்று உள்ளேன் . இந்த தமிழுலகம் உள்ள மட்டும் பட்டுக்கோட்டையார் (பாட்டுக்கோட்டையார்) நினைவும் நிலைத்து நிற்கும் . நான் பிறந்த மதுக்கூரில் அவரும் சில காலம் இருந்து உள்ளதை எண்ணி பெருமை அடைகின்றேன் , அவரது கவிதை பாடல் வரிகள் போன்று இனி ஒருவர் சிந்தித்து எழதுவது என்பது , அவரே பிறந்து வந்தால் மட்டும்மே எழுத இயலும் என்பதே உண்மை. கட்டுரையாளர் திரு . வெங்கடேசன் அவர்களுக்கு , மக்கள் கவிஞர் அமரர். திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றிய உயரிய தகவல்களை கட்டுரையின் வடிவில் தந்தமைக்கு என் போன்றோர்களின் நன்றி உரியதாகட்டும் .
நானும் மதுக்கூரை சேர்ந்தவன் தான் என்பதிலும் கவிஞர் அவர்கள் எங்கள் ஊரிலும் இருந்திருக்கிறார் எனும் போது மகிழ்ச்சி அடைகிறேன் கவிஞர் அவர்களின் அணைத்து பாடல்களுமே சிந்தனைக்கு உரியவை எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் "சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா" மிகவும் அருமையான வரிகள் நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல் வரிகள்
இன்றைக்கு தரம் கேட்ட , சமுதாயத்தில் ஒழுக்ககேடுகளை வளர்ப்பவர்கள் எல்லாம், அந்தரங்க உறவுகளை அசிங்கமான வரிகளில் எழுதி "கவிப் பேரரசு" என்றெல்லாம் பட்டம் பெற்றுகொண்டு, அரசியல்வியாதிகளின் அடிவருடி மத்திய மாநில அரசுகளின் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் நபர்களைப் பார்க்கும்போது பட்டுக்கோட்டையார் பாட்டுக்கோட்டையாரக திகழ்கின்றார். அருமையான கட்டுரை நன்றி
பட்டுகோட்டையாரின் பாடல்களை நமது குழந்தைகளுக்கு சொல்லி தருவோம், நமது குழந்தைகளின் எதிர்காலம் வளம் பெற.
பாட்டுக்கோட்டையாய் விளங்கியவர் பட்டுக்கோட்டையார். திரை உலகில் இன்று பாடல் எழுதுபவர்கள் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை முன்னுதாரணமாக வைத்து எழுத வேண்டும்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue