"வஞ்சி'யின் சொல்லாட்சி!

"வஞ்சி'யின் சொல்லாட்சி!








பைந்தமிழ்ப் பெயராகவும், வினையாகவும் ஒரு சொல்லே நின்று பொருள் தந்து சிறக்கும். இத்தகைய சொற்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏராளமாகப் பயின்றுவரும். ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பல பொருள் குறித்த ஒரு சொல்லும் "உரிச்சொல்' எனும் பெயரில் பயின்று வருவதும் தமிழின் சிறப்புக்கு மற்றுமோர் அடையாளமாகும். பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் பற்றி தொல்காப்பியமும், (தொல்.சொல்.160, தொல்.சொல்.198) நன்னூலும், (நன்.275, 322) குறிப்பிடுகின்றன.
"வஞ்சி' என்னும் சொல்லை ஒரு "வஞ்சி' தன் மனக்குமுறல் நிலையில் பெயராகவும், வினையாகவும் கையாளுகிறாள். அவள் ஒரு பருவ மங்கை. வாழ்க்கைத் துணைக்கு சிறந்த ஆடவனைத் தேடிப்பெறும் மனநிலையில் உள்ளாள். அவளது அழகையும், குடிப் பெருமையையும் அறிந்து, அருகமைந்த பேரூரிலிருந்து கட்டிளங்காளை ஒருவன் வருகிறான். இருவரும் கண்டனர்; காதல் கொண்டனர். களவு மணத்தால் அவள் நலனில் இன்புற்ற தலைவன் "குறித்த காலத்தில் மீண்டும் வந்து மணம் புரிந்து கொள்வதாகவும், உறுதிகூறிப் பிரிந்து செல்கிறான். குறித்த காலம் வந்தது; அவன் வரவில்லை. "கார்' வந்தும் அவன் "தேர்' வாராமையால், அவளது "ஏர்' குலைந்தது. உடல் நலிவுற்றாள்.
அருகிருந்த தோழி, காரணம் அறிந்தும் அறியாதாள்போல வினவுகிறாள். தோழிக்குத் தெரியாமலா தலைவி செயல்கள் அமையும்? அதுவரை மறைத்த உண்மையை இனிமேலும் மறைக்க இயலாது என எண்ணிய தலைவி, தோழியிடம் கூறி, தன்னை ஆறுதல்படுத்திக் கொள்கிறாள்.
""என் உள்ளம் கவர்ந்து சென்றவன் என்னை முதலில் கண்டபோது, "நான் வஞ்சிமா நகரில் பிறந்து வளர்ந்தவன்' என்றான். அந்நகர மக்கள் நற்குணம் நிறைந்தவர்கள் என்பதை நான் முன்னமே அறிந்திருந்ததால், அவ்வூரிலிருந்து வந்த இவன் நம்மை ஏமாற்றமாட்டான் என்று அவன் உரைத்தவற்றை உண்மை என நம்பி, அவனை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டேன். அவன் என்னைப் பிரியும்போது, "உன்னை ஏமாற்ற மாட்டேன்' என்று ஒருமுறைக்கு இருமுறை தன் ஊரின் பெயராலேயே உறுதிகூறிச் சென்றான். அப்போது இந்நிலை எனக்கு நேரும் என நான் எண்ணவில்லை. இருப்பினும் அவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றே என் உள்ளம் எண்ணுகிறது. என் உயிர்த் தோழியே! வஞ்சிநகர்த் தலைவனே இப்படி என்றால், மற்றவர்களை என்ன சொல்ல? என் துயரை என்னவென்று சொல்ல'' என அரற்றுகிறாள்.
களவு காலத்துத் தலைவன் - தலைவி உரையாடல் செய்தி, இங்கே தலைவி - தோழி உரையாடலாகிறது.
வஞ்சியான்(வஞ்சி நகரத்தான்) - இது தலைவன் கூற்று. வஞ்சியான் (வஞ்சிக்கமாட்டான்) - இது தலைவி கூற்று. வஞ்சியேன் (வஞ்சி நகரத்தான், வஞ்சிக்கமாட்டேன்) - இது தலைவன் கூற்று. வஞ்சி - தலைவி, தோழி, வஞ்சி நகரம், ஏமாற்று என்னும் நான்கு பொருளில் பெயராகவும், வினையாகவும் வந்தும், உடன்பாடு, எதிர்மறையாக வந்தும் சிறப்பான சொல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாய் நின்று இன்பம் தருகிறது.
யாப்பருங்கலக்காரிகை - ஒரு விகற்ப நேரிசை வெண்பா உதாரணம் - பாடல் இதோ:

""வஞ்சியான் என்றுதன் பேருரைத்தான், யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ''

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue