இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 31, 2011
இந்தியாவின் அரசியல் பொதுமொழி வேண்டும். இந்திமொழி நாடெங்கும் பெருவழக்கிற்று. அதுவே சிறந்தது என்கின்றனர். அரசியல் வளர்ச்சிக்குப் பொதுமொழி இன்றியமையாதது என்பதே தவறு. இந்திய நாடு இந்நிலை வருவதற்கு இந்திமொழி சிறிதும் துணை செய்ததில்லை. நாட்டில் வழங்கி வரும் பன்மொழிகளும் துணைசெய்து மக்கட்கு அரசியல் உணர்ச்சியை அளித்தன. காந்தி அடிகள் ஆகிய தலைவர்கள் தென்னாட்டிற்கு வந்த காலை நாட்டுமொழி அறியாது இடர்ப்பட்டாரில்லை. அவர்கள் கருத்துகளை அறியுமாறில்லாத தென்னாட்டினர் தடுமாறினதுமில்லை. இந்தி மொழி இந்திய நாடெங்கும் வழக்கில் உள்ளது எனுங் கூற்று ஒப்பத்தக்கதன்று. இந்திமொழி தென்னாட்டில் வழக்கில்லாதது. வடநாட்டில் சிற்சில பகுதிகளில் மட்டும் பல்வேறு உருவங்களில் வழக்கில் இருப்பது. பெருவழக்கில் இருப்பதென்பதும் மெய்க்கூற்று அன்று. ‘ஆங்கில ஆட்சியின் தொடர்பு முழுதும் விடுபட்டு இந்தியநாடு தன்னரசு கொள்ளும் நாளில் இந்திமொழியே அரசியல் திகழும். அதுகாலை தென்னாட்டினர் ஏக்கற்று நிற்காது முதன்மையிடம் பெறுதற்பொருட்டு இந்தியாவில் புலமையும் பயிற்சியும் பெறவேண்டும்’ என்பது மற்றொரு காரணம். இதுவும் ஏற்கப்படக் கூடியது அன்று. அரசியலற்றலைமையில் இருக்கும் ஒரு சிலர் விரும்பும் இந்தி செயல் நிறைவேற்றுவதற்குப் பிறர் கருவிகளாய் இருப்பது இழிந்த செயலாகும்.
- தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்: இந்திமொழி எதிர்ப்பு:
தமிழ்ப்பொழில்: தரவு: தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார்
வாழ்வும் பணிகளும்: பக்கம். 124-125
Comments
Post a Comment