என் தேசம் - என் வாழ்க்கை

பிடித்தது: ஏராளமான செய்திகள்... செய்திகள்!



பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி எழுதிய "என் தேசம் - என் வாழ்க்கை' என்கிற நூலை நான் சமீபத்தில் படித்தேன்.
மிகப் பெரிய புத்தகம், 1000 பக்கங்களுக்கு மேல். என் படிக்கும் வேகம், தமிழாய் இருந்தால் 1 மணிக்கு 60 பக்கம். ஆங்கிலமாக இருந்தால் மணிக்கு 40 பக்கம் மட்டுமே.
இந்த நூலை படித்து முடிக்க எனக்கு 17 மணி நேரங்களாகின. எட்டு நாட்களில் படித்து முடித்தேன்.
நான் கடந்த 50 வருஷங்களாக காங்கிரஸ் கட்சிக்காரன். அத்வானி அவர்கள் எதிர்க்கட்சிக்காரர். இருந்தும் அந்த நூலை முழுக்க முழுக்க ரசித்துப் படித்தேன். கடந்த ஒரு நூற்றாண்டில் நமது பாரததேசத்தில் நடந்த அத்தனை செய்திகளையும் ஒன்று விடாமல் இந்த நூலில் அத்வானி தருகிறார், தன் விளக்கத்தோடு.
இந்த நூலில் நான் படித்தறிந்த செய்திகள் ஏராளம். அவற்றில் ஒரு சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

இங்கே தகப்பனாரின் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் போட்டுக் கொள்கிறோம். ஆனால் குஜராத்தில் சில இடங்களில் அப்படி இல்லையாம். முதல் இடத்தைப் பெறுவது தன் பெயர். அடுத்து தந்தையின் பெயர். பின் வர்க்கப் பெயராம். காந்தியார் பெயர் அப்படித்தான் சேர்க்கை கொள்கிறதாம். காந்தியார் பெயர் மோஹன்தாஸ். பின்பு அவர் தந்தையார் பெயர் கரம் சந்திர. அடுத்து அவர் இனமான காந்தி (நம் ஊரில் அய்யங்கார், அய்யர், நாயுடு, பிள்ளை என்பதுபோல்). இந்த மூன்றும் கூடி அவர் மோஹன்தாஸ் கரம் சந்திர காந்தி ஆகிறார்.

* அத்வானி சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர். அது தற்போது பாகிஸ்தான் வசம் உள்ளது. காந்திஜியிடம் மல்கானி, ""சிந்து தேசத்தவர் (அதாவது அந்த மாநிலத்து ஹிந்துக்கள்)தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, ஜின்னா தொப்பி அணிந்து, உருது நாளிதழைப் படித்துக் கொண்டு நடமாட வேண்டியிருந்தது'' என்று சொல்லியிருக்கிறார்.
* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும், அத்வானியும் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரே பள்ளியில் படித்தவர்கள். இந்தியா வரும்போது முஷாரப் ஓர் ஆல்பம் கொண்டு வந்து அத்வானிக்குக் கொடுத்தாராம். அந்த ஆல்பத்தில் அத்வானி பள்ளியில் பெற்றிருந்த சான்றிதழ்கள், கல்வி ஆண்டு ஆவணங்கள், ஆசிரியர், மாணவர், பிரின்ஸிபால் படங்கள் இருந்தனவாம். பள்ளிக்கூடத்துக்குக் காலதாமதமாகப் போய் எப்போதாவது மானிடரிடம் நீங்கள் அடிவாங்கியதுண்டா என்று அத்வானியை முஷாரப் கேட்டாராம். அத்வானி அதற்கு, ""அப்படி ஒரு நாளும் காலம் தாழ்த்திப் போய் அடிவாங்கியதில்லை'' என்றாராம். ஆனால் முஷாரப், ""நான் அதற்கு நேர் மாறுதல். பள்ளிக்குத் தாமதமாகச் சென்று நிறைய தடவை பிரம்படி பட்டிருக்கிறேன்'' என்றாராம்.
* சிந்து என்கிற மாநிலத்தின் பெயர்தான் திரிந்து, ஹிந்த் என்றாகி பின்பு ஹிந்துஸ்தான் என்றும் மேலும் திரிந்து இந்தியா என்றாகியது என்கிறார் அத்வானி இந்த நூலில் ஓர் இடத்தில்.
* மராட்டிய மாவீரன் சிவாஜிக்கு இஸ்லாம் மதத்தின்மீது பகையோ, சகிப்பின்மையோ இருந்ததில்லை. மசூதிகள் மீதும் குரான் மீதும் அளவு கடந்த மரியாதை கொண்டவராம் வீர சிவாஜி.
* வீர சாவர்காரை அத்வானி அவரது சிவாஜி இல்லத்தில் ஒருமுறை சந்தித்தாராம்.
* பாகிஸ்தான் பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா தனது கடைசிக் காலத்தில், தான் பாகிஸ்தானைப் பிரித்து வாங்கியது தவறு என்று வருந்தினாராம். அவர் அஜீத்ஜாவேத்திடம், ""டெல்லி போய் நேருவைச் சந்தித்து கடந்தகால முட்டாள்தனங்களை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் நண்பர்கள் ஆகலாம்'' என்று கூற ஜின்னா ஆசைப்பட்டாராம்.
* சர்தார் படேல், ""பிரிவினைக்கு நாம் சம்மதித்திருக்கவே கூடாது. சமுத்திரத்தை அல்லது நதியின் நீரைப் பிரிக்க முடியுமா?'' என்று கேட்டாராம்.
இந்த நூலில் பல இடங்களில் சர்தார் படேலைத் தன் மானஸீக குரு என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஏராளமான, மிகமிக ஏராளமான செய்திகளைக் கொண்டது எல்.கே.அத்வானி எழுதிய "என் தேசம் - என் வாழ்க்கை' என்கிற நூல்.
சந்திப்பு: தமிழன்பன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue