இந்த வாரம் கலாரசிகன்



சமீபத்தில் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு போயிருந்தபோது, ஜவகர் கல்லூரி முதல்வரும், தமிழ்ப் பேராசிரியருமான மருதூர் அரங்கராசன், தான் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய..' என்னும் நூலை அன்புப் பரிசாகத் தந்துதவினார். நல்ல தமிழ் எழுத எளியதொரு படைப்பை ஏற்கெனவே நல்கித் தமிழ்த் தொண்டாற்றியிருக்கும் மருதூராரின் இன்னுமொரு படைப்பு இந்த "யாப்பறிந்து பாப்புனைய' என்னும் நூல்."யாப்பு' அறிந்து மரபுக் கவிதை இயற்ற விரும்புவோருக்கும், "யாப்பு' அறிந்தபின் புதுக்கவிதை புனைய விரும்புவோருக்கும் இந்நூல் கிடைத்தற்கரிய கையேடு. நம்பகமான வழித் துணை.இந்த அற்புதமான நூலுக்கு காலம் சென்ற பேராசிரியர் தி.வே.கோபாலய்யர் ஓர் ஆய்வுரை எழுதியிருக்கிறார். அதைப் படித்ததும் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். அச்சில் சுமார் மூன்று பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வுரையின் தனித்துவம் என்ன தெரியுமா? அது ஒரே ஒரு வாக்கியத்தால் ஆனது என்பதுதான். ஒரு இடத்திலாவது இடிக்கவேண்டுமே. அவரது தமிழ் ஆளுமை எத்தகையது என்பதை இந்த ஆய்வுரையைப் படித்தாலே தெரியும்.பண்டித வித்வான் தி.வே.கோபாலய்யர் புதுச்சேரியில் வாழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தமிழ்க் கடல். அவரை நூற்கடல் என்று சொன்னாலும் தகும். ""தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒரு சமயம் இல்லாமல் போய்விட்டாலும் கோபாலய்யர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டு வந்துவிடலாம். அந்த அளவுக்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர்'' என்று கோபாலய்யருக்கு புகழாரம் சூட்டுவார் முனைவர் "வைணவம்' பார்த்தசாரதி.பண்டித வித்வான் தி.வே.கோபாலய்யரைக் கொண்டு தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "தமிழ் இலக்கண பேரகராதி' ஒரு தன்னிகரற்ற தமிழ்க் கொடை. தி.வே.கோபாலய்யர் "தினமணி' நாளிதழுக்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதைப் படித்தாலே போதும், அந்தத் தமிழ்க் கடலைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. அந்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி-""ஆங்கிலம் கலந்து பேசினால்தான் பெருமை என்று தமிழ் மக்கள் சிலர் நினைக்கிறார்கள். ஆங்கிலம் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பரப்பப்பட்டிருக்கிறது. ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களைப் போல இல்லாமல், இங்கே தமிழே தெரியாமல் யாரும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கலாம். பின்னால் வரும் தலைமுறையைத் தமிழ் படிக்க வைப்பதற்கு என்ன செய்யப் போகிறோம்?புதிதாக ஒன்றும் செய்துவிட வேண்டாம். எல்லோரும் தப்பு இல்லாமல் தமிழ் கற்றுக் கொண்டாலே போதும். அதுகூட இங்கே நடக்கவில்லையே...?தமிழ் அளவுக்கு மேம்பட்ட மொழி எதுவும் எனக்குத் தெரியவில்லை. இதர இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத சார்பு உடையன. எனினும் சொற்கள் வடமொழியாகவும் இலக்கண அடிப்படை தமிழாகவும்தான் இருக்கின்றன.தமிழை உண்மையாகப் படித்தவர்கள் யாரும் துன்பப்பட மாட்டார்கள். எவ்வளவோ கிராமங்கள் இருந்தாலும் தமிழ் என்னை நிம்மதியாக வைத்திருக்கிறது''*******"திசை எட்டும்' மொழியாக்கக் காலாண்டிதழ் பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன். குறிஞ்சிப்பாடியில் இருந்து குறிஞ்சி வேலனை ஆசிரியராகக் கொண்டு அருந்தமிழ்ப் பணி ஆற்றிவரும் "திசை எட்டும்' தனிச்சுற்றுக்கு மட்டும் கிடைக்கும் அரிய பொக்கிஷம். தமிழ் பிரதி ரூ.40. சரி, ஆயுள் சந்தா எவ்வளவு என்று ஏன் இவர்கள் குறிப்பிடாமல் விட்டிருக்கிறார்கள்?வெளிவந்திருக்கும் இதழில் "டகீஸ் மென்டிரேகஸ் கவிதைகள்' பற்றி ராஜ்ஜா எழுதிய கட்டுரையும், அவரது கிரேக்கக் கவிதை சிலவற்றின் தமிழாக்கமும் வெளியிடப் பட்டிருக்கிறது.ஆங்கில இலக்கியத்தை கிரேக்கர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் டகீஸ் மென்டிரேகஸ். உலக இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்ட இந்த கிரேக்க மொழிபெயர்ப்பாளர் எழுதிய புத்தகங்களில் 14 ஆங்கில இலக்கிய மொழிபெயர்ப்புகள் அடங்கும். இலக்கிய விமர்சகராகக் கொடிகட்டிப் பறந்த டகீஸ் மென்டிரேகஸ் தனது 75 வது வயதில் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இந்தத் தகவலைத் தருவதும் ராஜ்ஜாதான்.எதையுமே வித்தியாசமாகச் சொல்வதில் வல்லவரான இவர் தனது கவிதைகளில் எதுவுமே முற்றுப்பெறவில்லை என்பதும் ஒவ்வொரு வாசகரும் தான் படிக்கும்போது அக்கவிதைகளின் முடிவைத் தனது கற்பனை சக்தியினால் முடித்து வைக்க வேண்டும் என்றும் அதே வாசகன் மீண்டும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு முடிவைக் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறார் டகீஸ் மென்டிரேகஸ்.அவரது கவிதைகளை ஸ்டேதிங் டெஸ்பாட்டே புளோஸ் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அவற்றில் சில ராஜ்ஜாவால் தமிழுருவம் பெற்றிருக்கின்றன. படித்தேன். ரசித்தேன். இதோ உங்களுடன் பகிர்ந்தேன்...பிரிந்த உதடுகள் கூடினஇரு வெட்டுக்காயங்களைப் போலஒன்றை ஒன்று ஆற்றிக்கொள்ள.நான் உடைத்தெறிந்த கண்ணாடியில்நீ என்னைக் கண்டாய் - பல சிறு சிறு உருவத்தில்.என்னுள் பலர் இருப்பதின் பிரம்மையைஉன்னுள் உண்டுபண்ணத்தான்.ஈரம் படிந்த ஜன்னல் கண்ணாடியில்உன் விரல் ஓவியம் தீட்டியதுஅதன்பின் தான் உலகம் தெரிந்ததுநீ வரைந்த கோடுகளின் வழியாக.இரவு நேரங்களில்மீண்டும் தேடி அலைகிறேன்,பகல் நேரங்களில் உன்னுடன் விளையாடிதோற்றுப் போன வார்த்தைகளை.மகிழ்ச்சி மென்மையானதுவெல்வெட் துணிபோல என்றாயே!பின் எப்படிநம் கைநிறைய முட்கள்?இங்கிருந்த சைப்ரஸ் மரங்கள் என்னவாயிற்று?அவை வெட்டப்பட்டதோடுநாற்காலிகளாகவும் ஆகிப் போயின.துக்கம் அனுசரிக்க எத்தனையோ வழிகள்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue