இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 16 March 2024 அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 6 : வடதிசை வணங்கிய வீரம்-தொடர்ச்சி ) தமிழர் வீரம் 7 கடலாண்ட காவலர் சேரன் காலாட்படை தமிழ் நாட்டு மூவேந்தரும் நிலப்படையோடு கப்பற் படையும் உடையராய் இருந்தனர். சேரநாட்டை யாண்ட செங்குட்டுவன் கப்பற்படையின் வலிமையால் பகைவரை வென்று “கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்” 1 என்று புகழ் பெற்றான். அவன் தந்தையாகிய நெடுஞ்சேரலாதன் கலப்படையெடுத்துக் கடம்பர் என்ற கடற்பகைவரை வென்றான். கடற் கடம்பர் இப்பேரரசர் இருவரும் தமிழ் நாட்டு வாணிக வளத்தைப் பாதுகாக்கக் கருதியே கடற்போர் புரிந்தனர் என்று தோற்றுகின்றது. அவர் காலத்தில் கடல் வழியாக நிகழ்ந்த வருத்தகத்தால் சேரநாடு சாலவும் வளமுற்றிருந்தது. அந் நாட்டில் அமைந்த முசிறி என்னும் துறைமுகம் உலகறிந்த நகரமாய் விளங்கிற்று. யவன நாட்டிலிருந்தும், அரேபியாவிலிருந்தும், எகிப்து நாட்டிலிருந்தும் வருத்தகக் கப்பல்கள் வந்த வண்ணமாயிருந்தமையால், அத் துறை, “ வளங்கெழு முசிறி “ 2 யாக விளங்கிற்று. ஆயினும், கடற்கொள்ளை அங்கு அடிக்கடி நிகழ்ந்துவந்தது. மேல் கடலின் இட